உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு!1304636340


உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு!


திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல். ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று இரவு திடீரென சந்தித்துப் பேசினர்.

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா நேற்று காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை  அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார்.

அஞ்சலி செலுத்திய பின்னர், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது, ஐசரி கணேஷ், பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

அரசியலில் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில், துக்க நிகழ்ச்சியில் இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Comments

Popular posts from this blog