"உடைந்த சூரியன்.." மிரள வைக்கும் படம்.. திகைத்த ஆய்வாளர்கள்.. பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா?3785875


"உடைந்த சூரியன்.." மிரள வைக்கும் படம்.. திகைத்த ஆய்வாளர்கள்.. பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா?


சூரியினின் ஒரு பகுதி தனியாக உடைந்துள்ளது பூமிக்கு ஆபத்து ஏற்படுத்துமா என்பதைப் பார்க்கலாம்.

வாஷிங்டன்: சூரியினின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புறத்தில் சுற்றி வருகிறது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பூமி உள்ளிட்ட சூரியக் குடும்பத்தில் இருக்கும் எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியன் தான் அடிப்படை.

சூரிய கதிர்கள் தான் இங்கு அனைத்து உயிரினங்களும் அடிப்படையாக இருக்கிறது.. சக்தி வாய்ந்த சூரியன் குறித்துக் கூடுதலாகப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

 

உடைந்த சூரியன்

வழக்கம் போல அமெரிக்காவின் நாசா தான் சூரியன் குறித்த ஆய்விலும் முன்னிலையில் உள்ளது. பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை ஆய்வாளர்கள் இங்கிருந்தபடியே ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது சூரியனில் நிகழ்ந்துள்ள அற்புதமான மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்று சுழற்சியை உருவாக்கியுள்ளது.. இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.

 

தீவிர ஆய்வு

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்டது.. ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது ட்விட்டரில் இதைப் பகிர்ந்திருந்தார். சூரியனில் இருந்து எப்போதும் சோலார் பிளார்ஸ் வெளியாகும்.. இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளைக் கூட பாதிக்கும். எனவே, சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்குக் கவலையையே ஏற்படுத்தும்.. இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளனர்.

 

சூறாவளி

இது தொடர்பாக ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டரில், "சூரியினில் வடக்கின் முக்கியப் பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது. அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார். சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிப்புறமாக விரிவடையும்.. கடந்த காலங்களிலும் இதுபோல பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால், இந்த முறை அது தனியாக வந்து பெரிய சுழலை உருவாக்கியதே ஆய்வாளர்களைத் திகைக்க வைத்தது.

 

திகைத்த ஆய்வாளர்கள்

தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சூரியன் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கத் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ஸ்காட் மெக்கின்டோஷ் இது தொடர்பாகக் கூறுகையில், "சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடையும்போது இவ்வளவு பெரிய சுழல் ஏற்படுவதை நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை" என்று அவர் தெரிவித்தார். இவரை மட்டுமின்றி பல்வேறு ஆய்வாளர்களையும் சூரியனில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு திகைக்க வைத்துள்ளது.

 

பூமிக்குப் பாதிப்பா

இது ஏன் இப்படி நிகழ்ந்தது இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.. பூமியில் இருந்தபடியே ஆய்வாளர்கள் சூரியனை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.. இருந்த போதும் அது பல ஆச்சரியங்களை நமக்குக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. உதாரணமாக இம்மாத தொடக்கத்தில் சூரியனில் இருந்து வந்த சக்திவாய்ந்த solar flare பூமியில் தகவல் தொடர்பைத் தற்காலிகமாக காலி செய்தது.

 

என்ன காரணம்

இப்போது வரை சூரியனின் ஒரு பகுதி இப்படி தனியாகப் பிரிந்ததால்.. பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. இந்த விவகாரத்தில் ஆய்வாளர்கள் மத்தியிலேயே குழப்பம் தொடர்ந்து வருகிறது. இருப்பினும், சூரியனின் காந்தப்புலத்தின் தலைகீழ் மாற்றத்துடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். அதாவது ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் காந்தப்புலன் தலைகீழாக மாறும்.. அதற்கும் இப்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

Comments

Popular posts from this blog

Salted Caramel Chocolate Tart #CaramelChocolate

Lasagna Cups

A Dermatologist Helped Us Find the Best Drugstore Sunscreens for Safe Fun in the Sun #Sun